Thursday 31 March 2016

கடவுள் நம் கண் முன்னே ஏன் தோன்றுவதில்லை?

சில மதங்களை பின்பற்றுபவர்கள் கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்துவிட்டு வானத்தில் மிக உயரமான ஏதோ ஒரு இடத்தில இருந்துகொண்டு ஆட்சி செய்து வருகிறார் என்று நம்புகின்றனர். வேறு சில மதங்களை பின்பற்றுவோர் தர்மத்தை காக்கவும் , நல்வழியை காட்டவும் கடவுள் இந்த பூமிக்கு மனிதர்களாகவும் வேறு பல உயிரினங்களாகவும் பழங்காலத்தில் பிறப்பெடுத்து வந்தார் என்றும் நம்புகின்றனர்.

மனிதர்களில் பலருக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இருக்கிறது. கடவுள் இருப்பதற்கான அறிவியல்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை; எனவே சந்தேகத்திற்கு இடமின்றி கடவுள்  இல்லை என்று நாத்திகர்கள் கூறுகின்றனர்.

"கடவுள் இருப்பாரானால் மனிதர்களாகிய நாம் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் அவர் ஏன் நம்முடைய கண் முன்னே நாம் புரிந்துகொள்ளும் உருவத்தில் தோன்றுவதில்லை? அவர் அப்படி தன்னை வெளிப்  படுத்தினால், அது அவர் இருப்பதற்கான மறுக்க முடியாத அத்தாட்சியாக இருக்குமே" என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனத்திலும் நாத்திகர்கள் மனத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. இது காலம் காலமாக கேட்கப்படும் கேள்விதான். மனிதர்களிடமிருந்தும் மற்ற அனைத்து படைப்பினங்களிடமிருந்தும் பிரிந்து இருக்கின்ற ஒரு தனி சக்தியாக மனிதர்கள் கடவுளை பற்றிய கருத்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி எழுவதற்கு காரணம்.

கடவுள் நம் கண் முன் ஏற்கெனவே எப்பொழுதும் தோற்றமளித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவள் எண்ணற்ற வடிவங்களில் நாம் காணுகின்ற எல்லா படைப்பினங்களாக எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறாள்.

கடவுள் சுத்தமான சக்தியாக (pure energy), சுத்த வெளியாக (absolute space), மெய்யுணர்வாக (consciousness) இருக்கிறது. அது நாம் காணக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய உருவத்திலோ, வடிவிலோ இல்லை.

கடவுள் ஏதோ ஒரு இடத்தில இருந்துகொண்டு இன்னொரு இடத்திற்கு நகரக்கூடியது அல்ல. அது எங்கும், எதிலும், எப்பொழுதும் ஆற்றலாக நிறைந்திருக்கிறது.  ஒரு இடத்தில மட்டும் கடவுள் தோன்றினால், மற்ற இடத்தில அது இல்லை என்றாகும்.  அது கடவுளால் முடியாது! கடவுளால் முடியாத ஒரு விஷயம், அவரால் இல்லாமல் இருக்க முடியாது(He cannot not exist) என்பதே.

எல்லா இடத்திலும் இருந்துகொண்டே  ஒரு குறிப்பிட்ட இடத்தில, குறிப்பிட்ட மக்களிடத்தில், குறிப்பிட்ட உருவத்தில் கடவுள் தன்னை வெளிப்படுத்தினால், அந்த குறிப்பிட்ட உருவம் மட்டுமே எல்லா காலத்துக்கும் கடவுளின் வடிவம் என்று அந்த மக்கள் முடிவு செய்து விடுவார்கள். மற்ற குழுவை சேர்ந்த மனிதர்கள் அதை கடவுளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் தான் கடவுள் என்று கூறுவதற்கு அத்தாட்சியாக அவள்  மலைகளை நகர செய்தாலும் அல்லது  வேறு ஏதாவது அதிசயங்களை செய்து காட்டினாலும் அவளை பிசாசு என்றோ சாத்தான் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு தீய சக்தி என்றோ வேறொரு குழுவை சேர்ந்த மனிதர்கள் கூறுவார்கள்.  அல்லது இதெல்லாம் அந்த குழுவை சேர்ந்த மனிதர்களின் வெறும் கற்பனை என்று சொல்வார்கள்.

கடவுள் தன்னுடைய கடவுள் தன்மையை வெளிப்புறமாக இருந்து அவதானிப்பதின்(observation) மூலமாக தனக்கு தானே வெளிப்படுத்துவதில்லை. மாறாக, உட்புற அனுபவத்தின் மூலமாகவே தன்னை உணர்கிறார். மேலும், உட்புற அனுபவம் கடவுளை வெளிப்படுத்தும்போது வெளிப்புற அவதானிப்பு அவசியமற்றதாக ஆகிவிடுகிறது. வெளிப்புற அவதானிப்பு அவசியமென்றால், பிறகு உட்புற அனுபவம் சாத்தியமற்றதாக ஆகிவிடுகிறது. அதனால்தான் நம்மால் கடவுளை நமக்கு வெளியே உணர முடியாது. கடவுளை நமக்கு உள்ளே, உள்நோக்கிய அனுபவம் மூலம் மட்டுமே உணர முடியும்.

நாம் என்ன நினைக்கிறோமோ, என்ன கூறுகிறோமோ அதுவே நம்முடைய யதார்த்தமாக(reality) உருவெடுக்கிறது. அதையே நாம்  நம் வாழ்வில் அனுபவமாக பெறுகிறோம். அந்த வகையில், கடவுள் உங்கள் முன் தோன்ற வேண்டும் என்று நீங்கள் கேட்டால், இப்படி கேட்பதே கடவுள் இப்பொழுது, இங்கே இல்லை என்று நீங்கள் கூறுவதாகும். இந்த கூற்றே கடவுள் இல்லை என்கிற அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். இருக்கிறது என்று நினைத்தால் இருப்பதையும், இல்லை என்று நினைத்தால் இல்லாததையும் நீங்கள் அனுபவமாக பெறுவீர்கள்.



--- விவேக்

Tuesday 29 March 2016

சுவாச தியானம்(Breath Meditation)

சுவாச தியானம் செய்யும் முறை 




தரையிலோ அல்லது நாற்காலியிலோ உங்களுக்கு வசதியான முறையில் அமர்ந்துகொள்ளுங்கள். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். இப்பொழுது  குணப்படுத்தும் ஒளி(healing light)    உங்கள் தலைக்குமேல் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். பிறகு அந்த ஒளி மெல்ல உங்கள் தலையில் இறங்கி உடல் முழுவதும் பாய்வதாக  கற்பனை செய்யுங்கள்.

பிறகு மெதுவாக நீண்ட மூச்சை உள்ளிழுங்கள். அந்த மூச்சை மெல்ல வெளியே விடுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போது பிரபஞ்ச சக்தி(cosmic energy) உள்ளே செல்வதாக நினையுங்கள். மூச்சை வெளியே விடும்போது உங்களிடமிருந்து பயமும்,கவலையும் பதட்டமும் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்கள். இவ்வாறு மூன்று முறை கற்பனை செய்யுங்கள். 
      
பிறகு தொடர்ந்து  நீண்ட மூச்சை மெல்ல உள்ளிழுங்கள், அதை மெல்ல வெளியே விடுங்கள்.    உங்கள் மூச்சின் மீது கவனம் செலுத்துங்கள். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் உங்கள் மூச்சோடு இணைந்திருங்கள்.  கடவுளின் அன்பையே நீங்கள் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

தியான நேரம் 

இந்த தியானத்தை தினமும் குறைந்தது 20 நிமிடங்களுக்கு செய்யுங்கள். உங்களுக்கு வசதியான  எந்த நேரத்திலும் இந்த தியானத்தை செய்யலாம். 

இந்த மூச்சு தியானத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் உங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும். இதை நீண்ட நேரம் செய்யும்போது உங்களின் ஆன்ம உடல் உங்களின் ஜட உடலைவிட்டு வெளியே வரும். அப்போது உங்களின் ஜட உடலும்  ஆன்ம உடலும் ஒளியால் ஆன கயிறால் இணைக்கப்பட்டிருக்கும். ஆன்ம உடலின் மூலம் நீங்கள் நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். நீங்கள் தியானத்தை முடிக்கும்போது ஆன்ம உடல் ஜட உடலுக்குள் திரும்பிவிடும். ஆன்ம உடல் வெளியே வந்தால் அதற்காக பயப்பட வேண்டாம். இது இயல்பான ஒன்றுதான். தினமும் இரவு தூக்கத்தில் நம்முடைய ஆன்ம உடல் ஜட உடலை விட்டு வெளியே வந்துகொண்டுதான் இருக்கிறது.


--- விவேக்

Saturday 26 March 2016

ஆத்ம சமாதி தியானம்(Soul Samadhi Meditation)


ஆத்ம சமாதி தியானம்

ஒவ்வொரு மனிதரும் தினமும் தியானம் செய்பவராக இருப்பது மிகவும் அவசியம். தியானம் செய்வதின்மூலம் நம்முடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் நாம் உண்மையிலேயே யார் என்பதையும் அறிந்துகொள்வோம். தியானம் என்பது நமக்கு உள்ளே நாம் பிரயாணம் செய்வதாகும்.




ஆத்ம சமாதி தியானம் செய்யும் முறை 

தரையிலோ அல்லது நாற்காலியிலோ உங்களுக்கு வசதியான முறையில் அமர்ந்துகொள்ளுங்கள். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். பிறகு உங்கள் இயல்பான சுவாசத்தை கவனியுங்கள். சிறிது நேரம் சுவாசத்துடன் ஒன்றி இருங்கள். அதன்பிறகு இரு புருவங்களுக்கு  மத்தியில் உங்கள் கவனத்தை குவியுங்கள். இங்குதான் மூன்றாம் கண் இருக்கிறது. எந்த சிந்தனையும் இல்லாமல் மனதை வெறுமையாக வையுங்கள். எண்ணங்கள் தோன்றும்போதெல்லாம் உடனே அதை நிறுத்திவிட்டு, சிந்தனையற்ற நிலைக்கு திரும்புங்கள். உங்கள் கவனம் முழுவதும் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கட்டும். சிறிது நேரத்தில் சிந்தனையற்ற நிலைக்கு சென்றுவிடுவீர்கள். இப்பொழுது உங்கள் சுவாசத்தின் ஓசை மட்டும் உங்களுக்குள்ளே கேட்பீர்கள். பிரபஞ்ச சக்தி உங்கள் உடல் முழுவதும் பாய்ந்துகொண்டு இருப்பதை நன்கு உணர்வீர்கள். இதே நிலையில் தொடரும்போது ஒருவிதமான இசையை கேட்பீர்கள். நீல நிற ஒளி அங்கும் இங்கும் நகர்வதை காண்பீர்கள். இந்த ஒளி வேறு எதுவுமல்ல. உங்களுடைய ஆன்மாதான் அது. இந்த ஒளி தோன்றாவிட்டால் பரவாயில்லை. அதை கற்பனை செய்ய வேண்டாம். பிறகு நீங்கள் இறையோடு, பிரபஞ்சத்தோடு ஒன்றோடு ஒன்றாக கலந்துவிடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. சமாதி என்பதற்கு ஒன்றோடு கலந்துவிடுதல் என்று பொருள். இந்த நிலையில் நீங்கள் வேறு கடவுள் வேறு அல்ல, நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல. நீங்கள் எல்லாமுமாக இருக்கிறீர்கள்.

தியான நேரம் 

இந்த தியானத்தை தினமும் குறைந்தது 40 நிமிடங்களுக்கு செய்யுங்கள். உங்களுக்கு வசதியான  எந்த நேரத்திலும் இந்த தியானத்தை செய்யலாம். அதிகாலையில் இதை செய்தால் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பதை நன்கு உணர்வீர்கள். நாளடைவில் உங்கள் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஆரோக்கியமும் ஏற்படுவதை காண்பீர்கள்.



--- விவேக்

Wednesday 16 March 2016

சக்திவாய்ந்த பிரார்த்தனை(Powerful Prayer)


உங்கள் ஒவ்வொருடைய வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்ற சக்திவாய்ந்த பிரார்த்தனை கீழே சொல்லப்பட்டுள்ளது. அது உங்களை உயர்ந்த ஆன்ம வளர்ச்சி பெற்ற மனிதர்களாக மாற்றக்கூடியது. இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம்  உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், அன்பையும், மகிழ்ச்சியையும் செல்வ செழிப்பையும் தொடர்ந்து வழங்கக்கூடியது. 

பிராத்தனை செய்யும் முறை

இந்த பிரார்த்தனையை இரவில் தூங்குவதற்கு சற்று முன்பு செய்ய வேண்டும். தூங்குவதற்காக படுத்துக்கொண்டு, தூக்கம் சொக்கும் அரைமயக்க நிலையில் உடலை தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரார்த்தனையின் ஒவ்வொரு வாக்கியத்தையும் உணர்ச்சிபூர்வமாக உங்களின் உடலில் உணர்ந்து நிதானமாக கூறுங்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் அப்படியே தூங்கிவிடுங்கள்.

பிரார்த்தனை

நான் எதற்கும் பயம் கொள்வதில்லை.
நான் எதற்கும் கோபம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் கவலைப்படுவதில்லை.
நான் எதற்காகவும் வெட்கம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் அவமானம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் குற்ற உணர்வு அடைவதில்லை.
நான் யார் மீதும் எதற்காகவும் வெறுப்பு கொள்வதில்லை.
நான் யார் மீதும் எதற்காகவும் பொறாமை கொள்வதில்லை.
நான் மற்ற எவரிடமும் போட்டி போடுவதில்லை.
நான் எவர் மீதும் விமர்சனம் செய்வதில்லை.

நான் எந்த வகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்திருந்தால் அதற்காக என்னை நான் முழுமையாக மன்னிக்கிறேன். மற்றவர்கள் எந்த வகையிலாவது எனக்கு துன்பம் விளைவித்திருந்தால் அதற்காக அவர்களை நான் முழுமையாக மன்னிக்கிறேன்.

நான் பிறருடைய வளர்ச்சியை, செல்வசெழிப்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் மேலும் செழிப்படைய வாழ்த்துகிறேன்.

நான் நிபந்தனையற்ற அன்பாக இருக்கிறேன்; நான் என் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறேன்; நான் அனைவர்மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறேன். நான் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறேன்; அமைதியுடன் இருக்கிறேன்; திருப்தியாக இருக்கிறேன்.

என்னுடைய தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றும் மூல ஆதாரமாக கடவுள் இருக்கிறார். என்னுடைய எல்லா தேவைகளும் ஒவ்வொரு கணப்பொழுதிலும்  ஒவ்வொரு இடத்திலும் நிறைவேறுகின்றன.

பணம் நல்லது. நான் பணத்தை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என்றும் பணம் தாராளமாகவும், அபரிமிதமாகவும், சந்தோஷமாகவும் நிலையாகவும் புழங்குகிறது. அதை நான் நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறேன். நான் நல்ல செல்வ செழிப்புடன் இருக்கிறேன். நான் தினமும் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்; மேலும் செழிப்படைந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டன.  அவற்றை நான் மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். அதற்காக என் முழு மனதோடு கடவுளுக்கு நான் நன்றி செலுத்திகிறேன். கடவுளுக்கு நன்றி.



--- விவேக்