Friday 8 April 2016

படைப்பு ஏன்(Why Creation)? - பகுதி 2

இங்கே, அங்கே என்று இருக்கின்ற அனைத்தையும் பிடித்க்க்கொண்டு இல்லாததாக இருக்கிறதையே பலர் கடவுள் என்று கூறுகின்றனர். உண்மையில்  இங்கும் அங்கும் இருக்கிற அனைத்தும் கடவுள்; அவற்றை எல்லாம் பிடித்துக்கொண்டு இருக்கிற இல்லாததும் கடவுள். கடவுள் இருக்கிறதாகவும் இல்லாமல் இருக்கிறதாகவும்(Is/Not is, Am/Not am). காணக்கூடியதும்(Seen) காண முடியாததும்(Unseen) கடவுள்தான். கடவுளன்றி வேறு எதுவும் இல்லை(There is nothing but God). இதுதான் கடவுள் பற்றிய சரியான புரிதல், வரையறை.

எது இருக்கிறதோ, எது காணக்கூடியதோ அதுதான் கடவுள் என்பதும் பிழையானது. எது இல்லாததோ, எதை காண முடியாதோ அதுவே கடவுள் என்பதும் பிழையே. கடவுள் இல்லாத ஒன்று இருக்கிறது என்பதையே இந்த இரண்டு பிழையான கருத்துக்களும் கூறுகின்றன. காணக்கூடியது மட்டும்தான் கடவுள் என்றால் காணமுடியாதது கடவுள் இல்லை என்றாகிறது. இந்த கூற்றுப்படி, கடவுள் இல்லாத ஒன்று காண முடியாததாக  இருக்கின்றது என்றாகும். அதேபோல, காணமுடியாதது மட்டுமே கடவுள் என்றால் காணக்கூடியது கடவுள் இல்லை என்றாகிறது. இந்த கூற்றுப்படி, கடவுள் இல்லாத ஒன்று காணக்கூடியதாக இருக்கின்றது என்றாகும். காண முடியாதது கடவுள் அல்ல என்பதும், காணக்கூடியது கடவுள் அல்ல என்பதும் பிழையான கருத்துக்கள். கடவுள் இல்லாத எதுவும் இல்லை(There is nothing God is not). இதுதான் யதார்த்தம்(reality). இதுதான் ஒரேயொரு யதார்த்தம்(Single Reality); இறுதி யதார்த்தம்(Ultimate Reality); கடைசி யதார்த்தம்(Final Reality).





இங்கே, அங்கே என்பதை படைத்ததினால் கடவுள் தன்னையே அனுபவித்து அறிந்து கொள்வது சாத்தியமானது. கடவுள் தனக்குள்ளேயே பெரிய வெடிப்பை நிகழ்த்தி(explosion) சார்பியலை படைத்தது(relativity); சார்பு உலகத்தை படைத்தது(relative world). அதன்மூலம் இருமை என்பதும் உறவு என்பதும் இருப்புக்கு வந்தன. இந்த சார்பு உலகத்தில் ஒன்றோடு ஒன்று எப்பொழுதும் சார்ந்தே இருக்கும், நடக்கும். இடம், பொருள், காலம், நிகழ்வு என்று எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று சார்ந்தே அமையும்.  கடவுள் தனக்கு உள்ளேயே நிகழ்த்திய இந்த வெடிப்பைத்தான் அறிவியலார்கள் பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பெரு வெடிப்பு என்கிறார்கள்(Big Bang).  இந்த மகத்தான வெடிப்புக்கு பிறகு இல்லாததிலிருந்து இருக்கிற அனைத்தும் படைக்கப்பட்டது. இல்லாதது என்பது கடவுள் தான். அறிய முடியாத ஆற்றலாக இருப்பதால் அதை இல்லாத நிலை எனலாமே தவிர அது எப்பொழுதும் அந்த நிலையிலேயே இருக்கிறது. சில மதங்கள் கடவுள் எல்லாவற்றையும் இல்லாததிலிருந்து படைத்தார் என்று கூறினாலும் அவர் தான் அல்லாத, தனக்கு வெளியே இந்த பிரபஞ்சத்தை ஒன்றும் இல்லாததிலிருந்து படைத்தார் என்றுதான் கூறுகின்றன. அது பிழையான கருத்து.



இவ்வாறு பெரு வெடிப்பு நிகந்தவுடன் தனிமங்கள் எல்லா திசைகளிலும் அதிவேகமாக சிதறி ஓடின. இப்படி அவை ஓடியதால் காலம் படைக்கப்பட்டது. ஒரு பொருள் முதலில் இங்கே இருந்தது ; பிறகு அது அங்கே இருந்தது; இங்கிருந்து அங்கு செல்வதற்கு அது எடுத்துக்கொண்ட  நேரம் கணக்கிடக்கூடியது என்று காலம் இருப்புக்கு வந்தது. கடவுளின் காணக்கூடிய பகுதிகள் தங்களுக்குள் ஒன்றையொன்று தொடர்பு படுத்தி தங்களை வரையறை செய்துகொள்ள தொடங்கின. அதேபோல், கடவுளின் காணமுடியாத பகுதிகளும் தங்களை வரையறை செய்துகொள்ள தொடங்கின.
காணக்கூடியது, காண முடியாதது என்று பிரபஞ்சத்தை பிரித்து, சுத்தமான ஆற்றலில் இருந்து இப்பொழுது இருக்கிற காணக்கூடிய, காண முடியாத அனைத்தையும் கடவுள் படைத்தது. அதாவது, பௌதீக பிரபஞ்சம்(Physical universe) மட்டும் படைக்கப்படவில்லை. பௌதீகத்திற்கு மேலான பிரபஞ்சமும்(Metaphysical universe) படைக்கப்பட்டது. இதுதான் இருக்கிறேன்/இல்லாமல் இருக்கிறேன்(Am/Not am) என்கிற சமன்பாடு. இந்த சமன்பாட்டின் முதல் பாதி தான் காணக்கூடிய பௌதீக பிரபஞ்சம். அதன்  இரண்டாம்  பாதி தான் காணமுடியாத பௌதீகத்திற்கு மேலான பிரபஞ்சமும். கடவுளின் அங்கமான சமன்பாட்டின் முதல் பாதி வெடித்தது போலவே, இரண்டாம் பாதியும் வெடித்தது. அதிலிருந்து முழுமையை விட சிறிய எண்ணற்ற ஆற்றல் அலகுகள்(energy units) படைக்கப்பட்டன. இவைகளைத்தான் நாம் ஆவிகள்(spirits) என்று கூறுகிறோம்  சமன்பாட்டின் முதல் பாதி ஜட உலகம்(material world). அதன் இரண்டாம் பாதி ஆவி உலகம்(spirit world). இதுவே சார்பு உலகம்(relative world) .

--- தொடரும்

--- விவேக்

Wednesday 6 April 2016

படைப்பு ஏன்(Why Creation)? - பகுதி 1

காலம் உருவானதற்கு முன் காலம் இருந்தது. அது காலம் இல்லாத காலம். அது ஆரம்பமோ முடிவோ அற்றது. அது சுத்த உலகம்(absolute world). அது ஒருமைத்துவம்(singularity). அதில் எல்லாமே ஒன்றுதான். அந்த ஒன்றைத்தவிர வேறு எதுவும் இல்லை. இருப்பதுவே இருந்த அனைத்துமாக இருந்தது(That which IS, was all there was).



வேறு எதுவும் இல்லாததால் அனைத்துமாக இருக்கிற அதனால் தன்னை அறிந்துகொள்ள முடியவில்லை. மற்ற வேறு எதுவும் இல்லை என்ற நிலையில், இருக்கிறதும் இல்லாத ஒரு நிலைதான். அந்த வகையில் இருக்கிறதும் இல்லாததாகவே இருந்தது. இருக்கிறது, ஆனால் இல்லை என்பதே நிலை. இதுவே  இருக்கிறது/இல்லாததாக (Is/Not is)இருக்கிறது என்பது.

நானே அனைத்துமாக இருக்கிறேன், என்னில் அனைத்தும் இருக்கிறது, தனக்கு வெளியே என்று எதுவும் இல்லை என்று அனைத்துமாக இருப்பது அறிந்து கொண்டது. அது அவ்வாறு தன்னை அறிந்து கொண்டது எண்ண ரீதியாகவே(conceptually). அனுபவ ரீதியாக(experientially) அல்ல. அனுபவ ரீதியாக அதனால் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. எதையும் எண்ண ரீதியாக அறிந்துகொள்வதும் அனுபவ ரீதியாக அறிந்துகொள்வதும் வேறானவை. எனவே அது தன்னை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ள விரும்பியது. முக்கியமாக, தான் மகத்துவமாக இருப்பதை எண்ண ரீதியாக அறிந்ததை அனுபவித்து அறிய அது விரும்பியது. தன்னுடைய மகத்துவத்தை தானே அனுபவிக்கும்போது அது எப்படி உணரும் என்பதை அறிய அது மிகவும் ஆவல் கொண்டது. இருப்பினும் அதுவே அனைத்துமாக இருப்பதினால், எதையும் அனுபவித்து அறிந்துகொள்வது சாத்தியமற்றதாக இருந்தது. ஏனெனில் ஒன்றை அனுபவபூர்வமாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு நேர்திரான ஒன்றின் மூலமே அது சாத்தியம். ஒன்றின் மூலமாகத்தான் அதற்கு நேரெதிரான மற்றொன்றை பற்றி அனுபவம் மூலம் அறிய முடியும். இல்லாதது இல்லாத நிலையில் இருப்பதுவும் இல்லாததுதான்(In the absence of that which is not, that which is, is not).

நானே அனைத்துமாக இருக்கிறேன், என்னை தவிர வேறு எதுவும் இல்லை, எனக்கு வெளியே என்று ஒரு இடம், வெளி என்கிற எந்த ஒரு புள்ளியும் கிடையாது என்பதை அனைத்துமாக இருப்பது சரியாக அறிந்துகொண்டது. எனவே தனக்கு வெளியே ஒரு புள்ளியில் இருந்துகொண்டு தன்னை அனுபவ   ரீதியாக அறிந்துகொள்ள தன்னால் எப்பவுமே முடியாது என்று அதற்கு தெரிந்தது. ஏனென்றால் அதுக்கு வெளியே ஒரு புள்ளி என்று எதுவும் இல்லை. வெளியே என்கிற சாத்தியம் இல்லாத பட்சத்தில், தனக்கு உள்ளேயே ஒரு குறிப்பிட்ட புள்ளியை(reference point) நிர்ணயித்துக் கொள்வதின் மூலம் மட்டுமே இப்படி ஒரு புள்ளி இருக்க முடியும் என்று அது அறிந்து கொண்டது. அந்த புள்ளிதான், இருக்கிறது/இல்லாமல் இருக்கிறது(Is/Not is), இருக்கிறேன்/இல்லாமல் இருக்கிறேன்(Am/Not am) என்பதாகும்.






நம்முடைய ஜட  புலன்களுக்கு புலப்படாத, அனைத்துமாக இருக்கிற சுத்தமான ஆற்றல், தனக்கு உள்ளேயே ஒரு குறிப்பிட்ட புள்ளியை பயன்படுத்துவதன் மூலம் தான் எதுவாக எல்லாம் இருப்பதாக எண்ண ரீதியாக அறிகிறதோ அதை எல்லாம் அனுபவித்து அறிந்து கொள்ள முடியும் என்று உணர்ந்தது. தன்னுடைய மகத்துவத்தை அனுபவ பூர்வமாக பார்த்து அறிய வேண்டுமென்றால், தன்னுடைய முழுமையை(whole) விட சிறிய தன்னுடைய பாகங்கள் (portions) தன்னுடைய மீதி பகுதியான முழுமையை பார்த்து அதின் மகத்துவத்தை அனுபவ ரீதியாக உணர முடியும் என்று அதற்கு தெரிந்தது.

எனவே அனைத்துமாக இருக்கிற ஆற்றல் தன்னையே பல எண்ணற்ற பாகங்களாக பிரித்துக்கொண்டது. இப்படி பிரித்ததால் முழுமை எந்த வகையிலும் சிறியதாகவில்லை. அது அப்படியே இருந்தது. ஒரே நேரத்தில் முழுமையும் இருப்பு கொண்டிருந்தது; அதைவிட சிறியதான அதன் பாகங்களும் இருப்பு கொண்டிருந்தன. அனைத்துமாக இருக்கும் ஆற்றல் தன்னையே தனித்தனியாக பல பாகங்களாக வெட்டி தன்னை பிரித்துக்கொள்ளவில்லை. அப்படி செய்வதும் சாத்தியமில்லை. அது தன்னை வெட்டி தனக்கு வெளியே என்று தன்னுடைய பாகத்தை தனியாக பிரிக்க முடியாது. ஏனென்றால் அதற்கு வெளியே என்று எந்த புள்ளியும் இல்லை. அது தனக்கு உள்ளேதான் எதையும் செய்ய முடியும். முழுமையானது தனக்கு உள்ளேயே தனித்துவப்படுத்துவதின்(Individuation) மூலமாக பல       எண்ணற்ற பாகங்களை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பாகமும் முழுமையிலிருந்து தனியாக பிரியாமல்  அதின் ஒரு பகுதியாக என்றும் இருக்கும். ஆகவே பாகங்கள் ஒவ்வொன்றும் முழுமையின் தனித்துவப்படுத்தப்பட்ட பகுதியே(individuated part) அன்றி அதிலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட பகுதி(individual part) அல்ல.
  
முழுமையின் மெய்யுணர்வு(consciousness) எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அதேசமயம் அதன் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி சொந்த மெய்யுணர்வு(individual own consciousness) கொடுக்கப்பட்டது. அதன்மூலம் பாகங்கள் அனைத்திற்கும் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம்(free will) தரப்பட்டது. இப்படி பாகங்களுக்கு தனி மெய்யுணர்வு வழங்கப்பட்டிருந்தாலும் அது முழுமையின் மெய்யுணர்வோடு எப்பொழுதும் ஒன்றர கலந்தே இருக்கும். ஏனென்றால் மெய்யுணர்வு தனியாக பிரிக்கப்பட்டது அல்ல(individualized); மாறாக அது தனித்துவப்படுத்தப்பட்டதே(individuated). ஒப்பீட்டுக்கு, அனைத்துமாக இருக்கும் ஆற்றலை கடல் என்றும்  அதன் பாகங்கள் கடல் நீரே கடலின் ஒரு பாகமாக தோன்றி நிலைத்திருக்கும்   நீர்க்குமிழ்கள் என்றும் கூறலாம்.

அனைத்துமாக இருப்பது தன்னையே பல பாகங்களாக பிரித்தபோது, முதன்முறையாக ஒன்றிலிருந்து இன்னொன்று வேறாக இருக்கிற இது, அது என்பது இருப்புக்கு வந்தது. அதுவரை எல்லாமே  ஒன்றாக(singularity) இருந்தது. இது, அது என்று தனித்  தனியானவைகள் இருப்புக்கு வந்தபோதும், இந்த இரண்டுமே அல்லாத, எல்லாமுமாக இருப்பது அப்படியே இருந்தது. இந்த விதமாக, இங்கே இருப்பது, அங்கே இருப்பது, இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் எங்கும் எல்லாமுமாக இருப்பது என்ற மூன்று கூறுகள் இருப்புக்கு வந்தன. இங்கேயும் அங்கேயும் இல்லாமல் எங்கும் இருப்பது இருந்தால்தான் இங்கே இருப்பதும் அங்கே இருப்பதும் இருப்பு கொள்ள முடியும். அதாவது, இல்லாததுதான் இருக்கிற எல்லாவற்றையும் ஒன்றாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறது.

--- தொடரும்


--- விவேக்

Thursday 31 March 2016

கடவுள் நம் கண் முன்னே ஏன் தோன்றுவதில்லை?

சில மதங்களை பின்பற்றுபவர்கள் கடவுள் இந்த பிரபஞ்சத்தை படைத்துவிட்டு வானத்தில் மிக உயரமான ஏதோ ஒரு இடத்தில இருந்துகொண்டு ஆட்சி செய்து வருகிறார் என்று நம்புகின்றனர். வேறு சில மதங்களை பின்பற்றுவோர் தர்மத்தை காக்கவும் , நல்வழியை காட்டவும் கடவுள் இந்த பூமிக்கு மனிதர்களாகவும் வேறு பல உயிரினங்களாகவும் பழங்காலத்தில் பிறப்பெடுத்து வந்தார் என்றும் நம்புகின்றனர்.

மனிதர்களில் பலருக்கு கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதில் சந்தேகம் இருக்கிறது. கடவுள் இருப்பதற்கான அறிவியல்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை; எனவே சந்தேகத்திற்கு இடமின்றி கடவுள்  இல்லை என்று நாத்திகர்கள் கூறுகின்றனர்.

"கடவுள் இருப்பாரானால் மனிதர்களாகிய நாம் பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் அவர் ஏன் நம்முடைய கண் முன்னே நாம் புரிந்துகொள்ளும் உருவத்தில் தோன்றுவதில்லை? அவர் அப்படி தன்னை வெளிப்  படுத்தினால், அது அவர் இருப்பதற்கான மறுக்க முடியாத அத்தாட்சியாக இருக்குமே" என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மனத்திலும் நாத்திகர்கள் மனத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. இது காலம் காலமாக கேட்கப்படும் கேள்விதான். மனிதர்களிடமிருந்தும் மற்ற அனைத்து படைப்பினங்களிடமிருந்தும் பிரிந்து இருக்கின்ற ஒரு தனி சக்தியாக மனிதர்கள் கடவுளை பற்றிய கருத்து கொண்டிருப்பதுதான் இந்த கேள்வி எழுவதற்கு காரணம்.

கடவுள் நம் கண் முன் ஏற்கெனவே எப்பொழுதும் தோற்றமளித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவள் எண்ணற்ற வடிவங்களில் நாம் காணுகின்ற எல்லா படைப்பினங்களாக எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறாள்.

கடவுள் சுத்தமான சக்தியாக (pure energy), சுத்த வெளியாக (absolute space), மெய்யுணர்வாக (consciousness) இருக்கிறது. அது நாம் காணக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய உருவத்திலோ, வடிவிலோ இல்லை.

கடவுள் ஏதோ ஒரு இடத்தில இருந்துகொண்டு இன்னொரு இடத்திற்கு நகரக்கூடியது அல்ல. அது எங்கும், எதிலும், எப்பொழுதும் ஆற்றலாக நிறைந்திருக்கிறது.  ஒரு இடத்தில மட்டும் கடவுள் தோன்றினால், மற்ற இடத்தில அது இல்லை என்றாகும்.  அது கடவுளால் முடியாது! கடவுளால் முடியாத ஒரு விஷயம், அவரால் இல்லாமல் இருக்க முடியாது(He cannot not exist) என்பதே.

எல்லா இடத்திலும் இருந்துகொண்டே  ஒரு குறிப்பிட்ட இடத்தில, குறிப்பிட்ட மக்களிடத்தில், குறிப்பிட்ட உருவத்தில் கடவுள் தன்னை வெளிப்படுத்தினால், அந்த குறிப்பிட்ட உருவம் மட்டுமே எல்லா காலத்துக்கும் கடவுளின் வடிவம் என்று அந்த மக்கள் முடிவு செய்து விடுவார்கள். மற்ற குழுவை சேர்ந்த மனிதர்கள் அதை கடவுளாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் தான் கடவுள் என்று கூறுவதற்கு அத்தாட்சியாக அவள்  மலைகளை நகர செய்தாலும் அல்லது  வேறு ஏதாவது அதிசயங்களை செய்து காட்டினாலும் அவளை பிசாசு என்றோ சாத்தான் என்றோ அல்லது வேறு ஏதோ ஒரு தீய சக்தி என்றோ வேறொரு குழுவை சேர்ந்த மனிதர்கள் கூறுவார்கள்.  அல்லது இதெல்லாம் அந்த குழுவை சேர்ந்த மனிதர்களின் வெறும் கற்பனை என்று சொல்வார்கள்.

கடவுள் தன்னுடைய கடவுள் தன்மையை வெளிப்புறமாக இருந்து அவதானிப்பதின்(observation) மூலமாக தனக்கு தானே வெளிப்படுத்துவதில்லை. மாறாக, உட்புற அனுபவத்தின் மூலமாகவே தன்னை உணர்கிறார். மேலும், உட்புற அனுபவம் கடவுளை வெளிப்படுத்தும்போது வெளிப்புற அவதானிப்பு அவசியமற்றதாக ஆகிவிடுகிறது. வெளிப்புற அவதானிப்பு அவசியமென்றால், பிறகு உட்புற அனுபவம் சாத்தியமற்றதாக ஆகிவிடுகிறது. அதனால்தான் நம்மால் கடவுளை நமக்கு வெளியே உணர முடியாது. கடவுளை நமக்கு உள்ளே, உள்நோக்கிய அனுபவம் மூலம் மட்டுமே உணர முடியும்.

நாம் என்ன நினைக்கிறோமோ, என்ன கூறுகிறோமோ அதுவே நம்முடைய யதார்த்தமாக(reality) உருவெடுக்கிறது. அதையே நாம்  நம் வாழ்வில் அனுபவமாக பெறுகிறோம். அந்த வகையில், கடவுள் உங்கள் முன் தோன்ற வேண்டும் என்று நீங்கள் கேட்டால், இப்படி கேட்பதே கடவுள் இப்பொழுது, இங்கே இல்லை என்று நீங்கள் கூறுவதாகும். இந்த கூற்றே கடவுள் இல்லை என்கிற அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். இருக்கிறது என்று நினைத்தால் இருப்பதையும், இல்லை என்று நினைத்தால் இல்லாததையும் நீங்கள் அனுபவமாக பெறுவீர்கள்.



--- விவேக்

Tuesday 29 March 2016

சுவாச தியானம்(Breath Meditation)

சுவாச தியானம் செய்யும் முறை 




தரையிலோ அல்லது நாற்காலியிலோ உங்களுக்கு வசதியான முறையில் அமர்ந்துகொள்ளுங்கள். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். இப்பொழுது  குணப்படுத்தும் ஒளி(healing light)    உங்கள் தலைக்குமேல் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். பிறகு அந்த ஒளி மெல்ல உங்கள் தலையில் இறங்கி உடல் முழுவதும் பாய்வதாக  கற்பனை செய்யுங்கள்.

பிறகு மெதுவாக நீண்ட மூச்சை உள்ளிழுங்கள். அந்த மூச்சை மெல்ல வெளியே விடுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போது பிரபஞ்ச சக்தி(cosmic energy) உள்ளே செல்வதாக நினையுங்கள். மூச்சை வெளியே விடும்போது உங்களிடமிருந்து பயமும்,கவலையும் பதட்டமும் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்கள். இவ்வாறு மூன்று முறை கற்பனை செய்யுங்கள். 
      
பிறகு தொடர்ந்து  நீண்ட மூச்சை மெல்ல உள்ளிழுங்கள், அதை மெல்ல வெளியே விடுங்கள்.    உங்கள் மூச்சின் மீது கவனம் செலுத்துங்கள். வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் உங்கள் மூச்சோடு இணைந்திருங்கள்.  கடவுளின் அன்பையே நீங்கள் சுவாசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.

தியான நேரம் 

இந்த தியானத்தை தினமும் குறைந்தது 20 நிமிடங்களுக்கு செய்யுங்கள். உங்களுக்கு வசதியான  எந்த நேரத்திலும் இந்த தியானத்தை செய்யலாம். 

இந்த மூச்சு தியானத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் உங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் குணமாகும். இதை நீண்ட நேரம் செய்யும்போது உங்களின் ஆன்ம உடல் உங்களின் ஜட உடலைவிட்டு வெளியே வரும். அப்போது உங்களின் ஜட உடலும்  ஆன்ம உடலும் ஒளியால் ஆன கயிறால் இணைக்கப்பட்டிருக்கும். ஆன்ம உடலின் மூலம் நீங்கள் நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். நீங்கள் தியானத்தை முடிக்கும்போது ஆன்ம உடல் ஜட உடலுக்குள் திரும்பிவிடும். ஆன்ம உடல் வெளியே வந்தால் அதற்காக பயப்பட வேண்டாம். இது இயல்பான ஒன்றுதான். தினமும் இரவு தூக்கத்தில் நம்முடைய ஆன்ம உடல் ஜட உடலை விட்டு வெளியே வந்துகொண்டுதான் இருக்கிறது.


--- விவேக்

Saturday 26 March 2016

ஆத்ம சமாதி தியானம்(Soul Samadhi Meditation)


ஆத்ம சமாதி தியானம்

ஒவ்வொரு மனிதரும் தினமும் தியானம் செய்பவராக இருப்பது மிகவும் அவசியம். தியானம் செய்வதின்மூலம் நம்முடைய உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் நாம் உண்மையிலேயே யார் என்பதையும் அறிந்துகொள்வோம். தியானம் என்பது நமக்கு உள்ளே நாம் பிரயாணம் செய்வதாகும்.




ஆத்ம சமாதி தியானம் செய்யும் முறை 

தரையிலோ அல்லது நாற்காலியிலோ உங்களுக்கு வசதியான முறையில் அமர்ந்துகொள்ளுங்கள். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். பிறகு உங்கள் இயல்பான சுவாசத்தை கவனியுங்கள். சிறிது நேரம் சுவாசத்துடன் ஒன்றி இருங்கள். அதன்பிறகு இரு புருவங்களுக்கு  மத்தியில் உங்கள் கவனத்தை குவியுங்கள். இங்குதான் மூன்றாம் கண் இருக்கிறது. எந்த சிந்தனையும் இல்லாமல் மனதை வெறுமையாக வையுங்கள். எண்ணங்கள் தோன்றும்போதெல்லாம் உடனே அதை நிறுத்திவிட்டு, சிந்தனையற்ற நிலைக்கு திரும்புங்கள். உங்கள் கவனம் முழுவதும் இரு புருவங்களுக்கு மத்தியில் இருக்கட்டும். சிறிது நேரத்தில் சிந்தனையற்ற நிலைக்கு சென்றுவிடுவீர்கள். இப்பொழுது உங்கள் சுவாசத்தின் ஓசை மட்டும் உங்களுக்குள்ளே கேட்பீர்கள். பிரபஞ்ச சக்தி உங்கள் உடல் முழுவதும் பாய்ந்துகொண்டு இருப்பதை நன்கு உணர்வீர்கள். இதே நிலையில் தொடரும்போது ஒருவிதமான இசையை கேட்பீர்கள். நீல நிற ஒளி அங்கும் இங்கும் நகர்வதை காண்பீர்கள். இந்த ஒளி வேறு எதுவுமல்ல. உங்களுடைய ஆன்மாதான் அது. இந்த ஒளி தோன்றாவிட்டால் பரவாயில்லை. அதை கற்பனை செய்ய வேண்டாம். பிறகு நீங்கள் இறையோடு, பிரபஞ்சத்தோடு ஒன்றோடு ஒன்றாக கலந்துவிடுவீர்கள். இதுதான் சமாதி நிலை. சமாதி என்பதற்கு ஒன்றோடு கலந்துவிடுதல் என்று பொருள். இந்த நிலையில் நீங்கள் வேறு கடவுள் வேறு அல்ல, நீங்கள் வேறு பிரபஞ்சம் வேறு அல்ல. நீங்கள் எல்லாமுமாக இருக்கிறீர்கள்.

தியான நேரம் 

இந்த தியானத்தை தினமும் குறைந்தது 40 நிமிடங்களுக்கு செய்யுங்கள். உங்களுக்கு வசதியான  எந்த நேரத்திலும் இந்த தியானத்தை செய்யலாம். அதிகாலையில் இதை செய்தால் அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பதை நன்கு உணர்வீர்கள். நாளடைவில் உங்கள் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஆரோக்கியமும் ஏற்படுவதை காண்பீர்கள்.



--- விவேக்

Wednesday 16 March 2016

சக்திவாய்ந்த பிரார்த்தனை(Powerful Prayer)


உங்கள் ஒவ்வொருடைய வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்ற சக்திவாய்ந்த பிரார்த்தனை கீழே சொல்லப்பட்டுள்ளது. அது உங்களை உயர்ந்த ஆன்ம வளர்ச்சி பெற்ற மனிதர்களாக மாற்றக்கூடியது. இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம்  உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், அன்பையும், மகிழ்ச்சியையும் செல்வ செழிப்பையும் தொடர்ந்து வழங்கக்கூடியது. 

பிராத்தனை செய்யும் முறை

இந்த பிரார்த்தனையை இரவில் தூங்குவதற்கு சற்று முன்பு செய்ய வேண்டும். தூங்குவதற்காக படுத்துக்கொண்டு, தூக்கம் சொக்கும் அரைமயக்க நிலையில் உடலை தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரார்த்தனையின் ஒவ்வொரு வாக்கியத்தையும் உணர்ச்சிபூர்வமாக உங்களின் உடலில் உணர்ந்து நிதானமாக கூறுங்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் அப்படியே தூங்கிவிடுங்கள்.

பிரார்த்தனை

நான் எதற்கும் பயம் கொள்வதில்லை.
நான் எதற்கும் கோபம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் கவலைப்படுவதில்லை.
நான் எதற்காகவும் வெட்கம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் அவமானம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் குற்ற உணர்வு அடைவதில்லை.
நான் யார் மீதும் எதற்காகவும் வெறுப்பு கொள்வதில்லை.
நான் யார் மீதும் எதற்காகவும் பொறாமை கொள்வதில்லை.
நான் மற்ற எவரிடமும் போட்டி போடுவதில்லை.
நான் எவர் மீதும் விமர்சனம் செய்வதில்லை.

நான் எந்த வகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்திருந்தால் அதற்காக என்னை நான் முழுமையாக மன்னிக்கிறேன். மற்றவர்கள் எந்த வகையிலாவது எனக்கு துன்பம் விளைவித்திருந்தால் அதற்காக அவர்களை நான் முழுமையாக மன்னிக்கிறேன்.

நான் பிறருடைய வளர்ச்சியை, செல்வசெழிப்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் மேலும் செழிப்படைய வாழ்த்துகிறேன்.

நான் நிபந்தனையற்ற அன்பாக இருக்கிறேன்; நான் என் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறேன்; நான் அனைவர்மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறேன். நான் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறேன்; அமைதியுடன் இருக்கிறேன்; திருப்தியாக இருக்கிறேன்.

என்னுடைய தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றும் மூல ஆதாரமாக கடவுள் இருக்கிறார். என்னுடைய எல்லா தேவைகளும் ஒவ்வொரு கணப்பொழுதிலும்  ஒவ்வொரு இடத்திலும் நிறைவேறுகின்றன.

பணம் நல்லது. நான் பணத்தை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என்றும் பணம் தாராளமாகவும், அபரிமிதமாகவும், சந்தோஷமாகவும் நிலையாகவும் புழங்குகிறது. அதை நான் நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறேன். நான் நல்ல செல்வ செழிப்புடன் இருக்கிறேன். நான் தினமும் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்; மேலும் செழிப்படைந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டன.  அவற்றை நான் மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். அதற்காக என் முழு மனதோடு கடவுளுக்கு நான் நன்றி செலுத்திகிறேன். கடவுளுக்கு நன்றி.



--- விவேக்